Saturday, January 17, 2009

பொங்கலோ பொங்கல்!!!

பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு போயிருந்தோம். நிகழுக்கு ஒரே குஷி. காலையில் எழுந்தால் நம்மையும் எழுப்பி கை பிடித்து மாடு இருக்குமிடத்திற்கு கூட்டிப் போய் விடுகிறாள். கொள்ளுப்பாட்டி, கொள்ளுத்தாத்தா, பெரியம்மா, அண்ணன், மாமா என்று யார் வந்தாலும், அவர்களையும் கை பிடித்து கூட்டி போகிறாள் மாடு பார்க்க. இவள் ஆர்வத்தை பார்த்து, மாட்டை வீட்டு முன் கட்டி போடலாமா என்றே யோசித்தோம். மாட்டுக்கு கொம்பில் பெயிண்ட் அடித்தோம். அப்புறம், பால் கறந்த போதுஅதை குடிக்க வேண்டுமென்று அடம் வேறு.

கையில் பாட்டில் மூடி ஒன்றை எடுத்தாள்வாயில் போட்டு விடப் போகிறாள் என்று பயந்து நான் அதை வாங்கி ஒளித்துவிட்டுகையில் இருப்பதைப்போல ஒரு கையை மூடி அதை அவள் திறக்கும் போது இன்னொரு கைக்கு மாற்றுவது போல மாற்றி, இந்த கையை திறந்து அவள் கவனத்தை விளையாட்டில் திசை திருப்ப முயன்றேன். இதற்கு முன் இப்படி செய்தால் என்ன கேட்டோம் என்று மறந்து விடுவாள். இந்த முறை இந்த கை அந்த கை என்று மாறி மாறி திறந்து பார்த்தவள், திடீரென யோசித்து, பக்கத்தில் இருந்த ஒரு பந்தை திறந்த கையில் வைத்து விட்டு மூடிய கையை திறந்து கொண்டே இப்போது என்ன செய்வாய் என்பது போல பார்க்கவும் அசந்து போய்விட்டேன் நான்.
கரும்பை என்னவோ என்று கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்புறம் எல்லோரும் சாப்பிடுவதை பார்த்ததும், அவளும் சாப்பிட முயன்றாள். தொண்டையில் சிக்கி கொள்ளும் என்பதால், கொடுக்கவில்லை. ஒரே கோவம் அவளுக்கு. எப்போதும் ஒரு கட்டு கரும்பு காலியாகும் எங்கள் வீட்டில், ஒரு தண்டு கூட காலியாகவில்லை. யாரும் சரியாக சாப்பிடவில்லை என்பது ஊருக்கு கிளம்பும்போது, வேலை பார்பவர்களுக்கு எடுத்து கொடுத்து விட்டு வரும்போதுதான் தெரிந்தது.
நாம் அனுபவித்த எவ்வளவு விசயங்களை நிகழ் மிஸ் பண்ண போகிறாள் என்பது தெரிந்தது.
ஆற்றுகுளியல் - மணல் அள்ளுபவர்களின் உபயத்தில் சீரழிந்த ஈழத்தமிழர் வாழ்வு போல் கிடக்கிறது.

ஜல்லிக்கட்டு - இதற்கென்றே வளர்க்கப்பட்ட மாடுகள் இப்போது எங்கள் ஊர் பக்கம் இல்லவே இல்லை.

பாலத்தில் இருந்து குதிப்பது - ஆற்றில் தண்ணீர் இல்லை மணலும் இல்லை.

புளியமரம் ஏறுவது - கல்வியும், நகரமும், அப்படி குதித்த நமக்குள் இருந்த தைரியத்தை பிடுங்கி விட்டது. நம் பெற்றோர் போல நாம் தைரியசாலிகள் இல்லை.

தேன் மிட்டாய் ஜவ்வு
மிட்டாய் - மீண்டும் கல்வி, சுகாதார விழிப்புணர்வு.

சின்ன சில்வர் குடத்தில் ஆற்றுப்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து கொண்டு இருக்கும் அம்மவிடம் சண்டை போட்டு தண்ணீர் பிடித்து சுமந்து வருவது. - குழாய்கள் உபயம்.

எனினும், இப்போது
இவர்கள் அனுபவிக்கும் சில விசயங்கள் நாம் நினைத்து பார்க்காதவை. நம் பெற்றோர் அனுபவித்த சில விசயங்களை நாம் மிஸ் பண்ணவில்லையா? எனவே காலத்தின் கையில் சிலவற்றை விட்டு, நம் கையில் முடிந்தவரை சிலவற்றை எடுத்துக்கொண்டு, நம் வேர்களுடனான உறவை நாம் நம் குழந்தைகளுக்கு அவ்வப்போது, இந்த திருநாள்கள் மூலமாவது புதுப்பித்துக்கொள்வோம்.

Friday, January 9, 2009

இவங்களுக்கு எல்லாம் சிரிப்பா வராதா?

முதல் முறையாக இங்கு பொது விஷயம் பற்றி எழுதுகிறேன். நிகழுக்கான இடம் தானே இது என்று யாரேனும் கேட்கலாம். ஆம். இந்த சமுதாயமும் என் நிகழுக்கானது தானே?
திருமங்கலம் தேர்தல் ரொம்ப ஆரவாரமா நடக்குதுப்பா!!! யார் யார் என்னென்ன கொடுக்கிறாங்கன்னு டி வி ல இவங்க அவங்களப் பத்தியும் அவங்க இவங்கள பத்தியும் மாத்தி மாத்தி சொல்றாங்க. எல்லாரும் கொடுப்பது எல்லாருக்கும் தெரியும். அவங்களுக்கு தெரியும், நமக்கு, தேர்தல் கமிஷனுக்கு, போலிசுக்கு (நான் காமெடி கீமெடி பண்ணலியே?) ஏன் சின்ன பிள்ளைக்கு கூட தெரியும். ஆனா இவர் பேசும்போது அவங்களையும், அவங்க பேசும் போது இவங்களையும், எவ்ளோ உணர்வு பூர்வமா ஆத்திரத்தோட ஐயோ இப்படியும் அநியாயம் நடக்க கண்டமான்னு நிஜமாவே வயிறு எரியிற மாதிரி பேசுறாங்களே, இவங்களுக்கெல்லாம் மேடைல அப்பிடி பேசும்போது சிரிப்பு சிரிப்பா வராதா?