Monday, December 15, 2008

மயிலை பாரு மயிலை பாரு!!!

புதிதாக குறுந்தகடு (சிடிக்கு அதுதானே தமிழில்?) வாங்கினோம். அதில் நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மயிலை பாரு மயிலை பாரு தோகை விரித்து ஆடுது என்ற பாடல். அந்த பாடல் வந்த உடன் என் நிகழ் மயிலைப்போல அகவுகிறாள். என்ன மிருகத்தை பார்க்கிறாளோ அந்த மிருகம் போல் சத்தமிட முயற்சி செய்கிறாள். பிறந்ததில் இருந்து நான் பாடிய தாலாட்டை விட வரிக்கு ஒரு விலங்கு பேர் சொல்லி அதைப்போல மிமிக்ரி செய்து அவள் தூங்கியதே அதிகம். ( இது அவள் என் மிமிக்ரிக்கு கொடுத்த பரிசா இல்லை என் பாட்டுக்கு கொடுத்த தண்டனையா) இப்போதெல்லாம் அவளே ஆரம்பித்து விட்டாள். காகம், நரி, நாய், பூனை, சிங்கம், புலி, முயல், ஆந்தை (ஆம் ஆந்தை தான்.) போல அவளே சத்தம் போடுகிறாள். வார்டு ரோப் கண்ணாடி முன் பாய் நின்று கொண்டு, அவள் அடிக்கும் கூத்து இருக்கிறதே சொல்லி மாளாது. அவள் வயிற்றை தடவுவாள், பின்புறம் கை கட்டி நின்று திரும்பி பார்ப்பாள், வேறு என்ன சேட்டைகளை நம்மிடம் செய்கிறாளோ அதை எல்லாம் கண்ணாடி முன் நின்று செய்து பார்ப்பாள். அவளுக்கு அவளே முத்தம் கொடுப்பாள். சிரித்துக்கொள்வாள். அடடடா!!!இப்படியெல்லாமா நாம் செய்தோம் என்று யோசனையாகவும், இவளுக்கு எப்படி ஈடு கொடுத்து, நல்லது பொல்லாததை முகப்படுத்தப்போகிறோம் என்று மலைப்பாகவும் இருக்கிறது. தூளியை ஆட்டிக்கொண்டு இருக்கும்போது நம்மை கூப்பிட்டு முத்தம் கொடுத்துவிட்டு திரும்ப படுத்துக்கொள்ளும்போது உலகத்தையே வென்ற பெருமையில் உள்ளம் பூரிக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் சங்கீத திருநாளோ என்ற பாடல் எப்போதும் என் பிரிய பாடல் வரிசையில் ஒன்று. அதை இப்போது உளமார அனுபவித்து கேட்கிறேன். பிடித்த ஒரு விஷயம், முற்றிலும் வேறு பரிமாணத்தில் இன்னும் பிடித்தமான விசயமாக மாறும் அதிசயம் புதிது.

Tuesday, December 2, 2008

நடக்கும் குட்டி தேர்!!!

நிகழ் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள். உடலை சாய்த்து, மெல்ல அடி எடுத்து அவள் வைப்பது தேர், அன்னம், குழந்தை கண்ணன் இன்னும் என்னென்னவோ இனிமையான விசயங்களை நினைவூட்டுகிறது. ஓடிச்சென்று அள்ளிகொள்கிறேன். அவள் ஓடிவந்து கால்களை கட்டிகொள்ளும்போது, வாழ்க்கை மிக இனிமையான ஒன்றாக இருக்கிறது.
அவளுக்கு ஊட்டிவிடும்போது, பிடிவாதம் பிடித்து தானே கையில் வாங்குகிறாள். கீழே கொட்டப்போகிறாள் என்று நினைத்தால், அதை ஊதி (சூடாக இருக்கிறதாம் ) நமக்கு ஊட்டுகிறாள். யாராவது வீட்டு அழைப்பு மணி அழுத்தி விட்டால், அவர்களை திரும்ப போக விட மாட்டேன் என்கிறாள். ( டோர் டெலிவரி செய்ய வருபவர்களை கூட ). பெரியவர்களை எல்லாம் மாமா என்கிறாள். பெண்களை, வயதானவர்களை இன்னும் ஒன்றும் சொல்வதில். சின்னவர்களை எல்லாம் அக்கா என்கிறாள். அண்ணா அக்கா வித்தியாசம் தெரியவில்லை. வேண்டுமென்றே முட்டிவிட்டு சுவரை அடிக்கிறாள். குடலை வுருவிடுவேன் என்று கையிலேயே கத்தியை திட்டுகிறாள்.
நான் மிக சந்தோசமாக இருக்கிறேன்.

Monday, September 22, 2008

என் நிகழ்!!!

உன் உலகம் விரியும்போது என் உலகம் உன் சின்ன கைகளுக்குள் மகிழ்ச்சியோடு சுருங்குகிறது!
என் நிகழ் அவள் வாயில் தின்பண்டங்களை (தின்பண்டம் என்று அவள் நினைப்பதை எல்லாம் ;-) )வாயில் வைக்க பழகிக்கொண்டு இருக்கிறாள். கூடவே எனக்கும் வந்து ஊட்டுகிறாள். என் வாயில் இருப்பதை தோண்டுகிறாள். குக்கர் விசில் சத்தம் கேட்கும்போது கிச்சனில் இருந்தால் பயப்படுகிறாள். வெளியில் இருந்தால் கெகெகெ வென சிரித்துகொண்டே மேலேறி வந்து உட்காருகிறாள். கிரேசி பிராக் பாடல் வந்தால் இமைக்காமல் பார்க்கிறாள். திரும்ப போடச்சொல்லி உம் உம் மென சொல்கிறாள். பூச்சாண்டி பாடலும் அவளுக்கு மிக பிடிக்கிறது. நாம் வேலையாக இருந்தால் பக்கத்தில் வந்து எட்டி பார்த்து சிரிக்கிறாள். எல்லாரையும் நிமிடத்தில் மயக்கி விடுகிறாள். ஏதாவது சொன்னாலோ, கதை சொன்னாலோ புரிந்தது போலவே தலை ஆட்டுகிறாள்.
இவளுக்கு சொல்லித்தரவே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

Saturday, September 20, 2008

ஆதிரை!!!

ஆதிரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லவில்லை! மூத்த தமிழ்க்குடி தெய்வம், (பொதுவாக சூரியனை ஆணாக வர்ணிப்பார். பழங்காலத்தில் பெண்ணாக வணங்கியதற்கு சான்று உள்ளது. மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் வழங்கிய தெய்வம்.
மீதி இனி வரும் நாள்களில்.

நிகழ்!!!

நிகழ்!!!!

ஒரு மூன்று வருடங்களுக்கு முன் இருக்கலாம். அப்போதெல்லாம் எனக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது! என் கணவரின் விதி எங்கள் பாதையை ஒன்று சேர்த்ததுபோல! அப்போது நான் நினைத்திருந்தேன்! என் மகளுக்கு நிகழ் என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று. நண்பர்களின் குழந்தை செல்வங்களுக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்க யோசனை சொல்லும்போதெல்லாம் மறந்தும் இந்த பெயரை சொல்லமாட்டேன். எல்லாம் ஒரு சுய நலம் தான். தப்பா என்ன?
அப்புறம் நான் கருவுற்றிருப்பது அறிந்ததும் நான் என் கணவரிடம் சொன்னேன். எந்த குழந்தையாக இருந்தாலும் "நிகழ்" தான் பெயர். அடுத்த பாதி பெயர் வேண்டுமானால் பெண் அல்லது பையன் போல வைக்கலாம் என்று. அவருக்கும் மகிழ்ச்சி.
அப்புறம் எனக்கு பெண் வேண்டுமென ஆசை. பெண்ணாய் தான் இருக்கும் இருந்தா "நிகழ் இடானியா" என்று வைக்க வேண்டும் என்று சொன்னேன். இறுதி வரை அப்பிடியே நினைத்தேன். காரணம் லத்தீன் அமெரிக்கா புரட்சி வரலாற்றில் பிரபலமான ஒரு கடிதம். முகம் தெரியாத ஒரு தாயின் கடிதம். அதில் இடானியா என்ற தன் மகளுக்கு எழுதியிருப்பாள், பூக்களும், சிரிப்பும் நிறைந்த ஒரு உலகத்தை உனக்கு விட்டு செல்லவே நான் ஆயுதம் ஏந்தி போராடுகிறேன் என்று.அந்த உலகில் நான் உன்னுடன் இருப்பேனோ இல்லையோ தெரியாது ஆனால் அமைதி இருக்கும். இன்றை பற்றிய மகிழ்ச்சியும், விடியலை பற்றிய நம்பிக்கையும் இருக்கும் என்று. அந்த செல்ல மகள் இடானியாவை நினைத்து பொறாமையாக இருந்தது. அவளுக்கு அவள் தாய் நினைத்து கிடைத்ததா என்பதைசரித்திரத்திற்கே விடுவோம். ஆனால் நான் அத்தகைய ஒரு தாயாய் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் பல இடர்கள். என் மனதிலும் சில ஒவ்வா நம்பிக்கைகள்.(தெரிகிறது தவறென்று. மாற்றிக்கொள்ள காலம் வேண்டும்) என் மகள் பிறந்ததும் ஆதிரை என்று வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதாவது "நிகழ் ஆதிரை". என் உலகம் இப்போது. "நிகழ்" என்று தான் அழைக்கிறோம். பெரும்பாலும் செல்லக்குட்டி, தங்ககட்டிதான் எல்லோரையும் போல.
இப்போது அவளுக்கு பத்து மாதம் இருபது நாள். யார் மாதிரி என்பதை இன்னும் யோசிக்க வைக்கிறாள். நாலோரி மேனி, பொழுதொரு வண்ணம், வேளைக்கொரு சாயல். எல்லோரையும் திருப்தி படுத்துகிறாள். எல்லோரையும் தன்னைப்போல இவள் என்று நினைக்க வைக்கிறாள். என்னைக்கூட.!!! ஒவ்வொரு அசைவும் என்னையும் என் கணவரையும் வியக்க வைக்கிறது. இப்படி எல்லாமா சின்ன குழந்தைகள் செய்வார்கள் என்று வியக்க வைக்கிறாள். மூக்கை சுழிக்கிறாள், கண்ணை சிமிட்டுகிறாள், வாயை குவிக்கிறாள், இன்னும் என்னென்னவோ!!! கற்றதெல்லாம் கை மண்ணளவு, கல்லாமல் விட்டதெல்லாம் உலகளவு, என் கண்ணம்மா எங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வு, திகைப்பெல்லாம் வானம், அண்டம் இன்னும் என்னவெல்லாமோ அளவு! திக்கு முக்காடி போயிருக்கிறோம்! நல்லவிதம் இவளை முகப்படுத்த வேண்டுமே என்ற கவலையும் மேலோங்கிகிறது.
இன்னும் நிறைய என் நினைவுக்குமிழ்கள் "நிகழும், நிகழ் சார்ந்தவையும்!!!"