Monday, December 15, 2008

மயிலை பாரு மயிலை பாரு!!!

புதிதாக குறுந்தகடு (சிடிக்கு அதுதானே தமிழில்?) வாங்கினோம். அதில் நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மயிலை பாரு மயிலை பாரு தோகை விரித்து ஆடுது என்ற பாடல். அந்த பாடல் வந்த உடன் என் நிகழ் மயிலைப்போல அகவுகிறாள். என்ன மிருகத்தை பார்க்கிறாளோ அந்த மிருகம் போல் சத்தமிட முயற்சி செய்கிறாள். பிறந்ததில் இருந்து நான் பாடிய தாலாட்டை விட வரிக்கு ஒரு விலங்கு பேர் சொல்லி அதைப்போல மிமிக்ரி செய்து அவள் தூங்கியதே அதிகம். ( இது அவள் என் மிமிக்ரிக்கு கொடுத்த பரிசா இல்லை என் பாட்டுக்கு கொடுத்த தண்டனையா) இப்போதெல்லாம் அவளே ஆரம்பித்து விட்டாள். காகம், நரி, நாய், பூனை, சிங்கம், புலி, முயல், ஆந்தை (ஆம் ஆந்தை தான்.) போல அவளே சத்தம் போடுகிறாள். வார்டு ரோப் கண்ணாடி முன் பாய் நின்று கொண்டு, அவள் அடிக்கும் கூத்து இருக்கிறதே சொல்லி மாளாது. அவள் வயிற்றை தடவுவாள், பின்புறம் கை கட்டி நின்று திரும்பி பார்ப்பாள், வேறு என்ன சேட்டைகளை நம்மிடம் செய்கிறாளோ அதை எல்லாம் கண்ணாடி முன் நின்று செய்து பார்ப்பாள். அவளுக்கு அவளே முத்தம் கொடுப்பாள். சிரித்துக்கொள்வாள். அடடடா!!!இப்படியெல்லாமா நாம் செய்தோம் என்று யோசனையாகவும், இவளுக்கு எப்படி ஈடு கொடுத்து, நல்லது பொல்லாததை முகப்படுத்தப்போகிறோம் என்று மலைப்பாகவும் இருக்கிறது. தூளியை ஆட்டிக்கொண்டு இருக்கும்போது நம்மை கூப்பிட்டு முத்தம் கொடுத்துவிட்டு திரும்ப படுத்துக்கொள்ளும்போது உலகத்தையே வென்ற பெருமையில் உள்ளம் பூரிக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் சங்கீத திருநாளோ என்ற பாடல் எப்போதும் என் பிரிய பாடல் வரிசையில் ஒன்று. அதை இப்போது உளமார அனுபவித்து கேட்கிறேன். பிடித்த ஒரு விஷயம், முற்றிலும் வேறு பரிமாணத்தில் இன்னும் பிடித்தமான விசயமாக மாறும் அதிசயம் புதிது.

2 comments:

ரிதன்யா said...

ஹா ஹா ஹா இன்னும் இருக்குங்க
அன்பாலயே திணறடிக்கபோறாங்க.
மூச்சு முட்டும் பாருங்க.

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு உங்க அனுபவம்!!